தேங்காப்பட்டணம் பகுதியில் நேற்று பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் மீன்பிடி துறைமுகம் சேதம் அடைந்தது. கடற்கரையில் நிறுத்தப்பட்டு இருந்த படகுகளை பதம்பார்க்கும் ராட்சத அலை.
குமரியில் திடீர் கடல் சீற்றம் மீன்பிடி துறைமுகம் சேதம்
குமரியில் நேற்று வழக்கத்திற்கு மாறாக ஏற்பட்ட திடீர் கடல் சீற்றத்தால் தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகம் சேதமடைந்தது.
குமரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான கால கட்டங்களில் கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுவது வழக்கம். தேங்காபட்டணம் கடற்கரை பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அரையன் தோப்பு முள்ளுர்துறை போன்ற பகுதிகளில் கடலரிப்பால் தடுப்பு சுவர்கள் முற்றிலும் அழிந்து, சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் பல மாதங்களாக 7 கடற்கரை கிராம பகுதி மக்கள் போக்குவரத்தின்றி தவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் எப்போதும் இல்லாத வகையில் நேற்று திடீர் என தேங்காபட்டணம் பகுதியில் கடுமையான கடல் சீற்றம் எற்பட்டது. காலையில் தொடங்கிய கடல் சீற்றம் மாலையிலும் தொடர்ந்தது. சுமார் 50 அடி முதல் 60 அடி உயரம் வரையிலும் ராட்சத அலைகள் எழும்பியது. இதனால் ராமன்துறை, முள்ளூர்துறை போன்ற இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்து. சிலரது வீடுகளின் உள்ளேயும் கடல் நீர் புகுந்தது. இதனால், வீட்டில் இருந்தவர்கள் வெளியேறினார்கள்.
முள்ளூர்துறையில் அந்த பகுதி மக்கள் பயன்படுத்தும் கல்லறை தோட்டம் ஏற்கனவே சேதமடைந்த நிலையில், நேற்று ஏற்பட்ட கடல் சீற்றத்தில் மேலும் அரிப்பு ஏற்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டிருந்த பல உடல்கள் கடலில் அடித்து செல்லப்பட்டதாக பரபரப்பாக கூறப்பட்டது. ஹெலன் காலனி பகுதியிலும் இதுபோன்று சாலை மற்றும் கல்லறை தோட்டம் முற்றிலும் சேதமடைந்து கடலில் அடித்து செல்லப் பட்டுள்ளது.
ராட்சத அலைகளால் தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுக பகுதியில் துறைமுக கட்டுமான பணிகள் சில இடங்களில் சேதமடைந்துள்ளது. அலை தடுப்பு சுவர் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த கோர்லாக் கட்டைகளை சில இடங்களில் கடல் அலை அடித்து சென்றுள்ளது. இதனால் மீன்பிடி துறைமுகத்தின் அலை தடுப்பு சுவருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
Link :