சென்னை,
சென்னை பட்டினப்பாக்கத்தில் கடல் சீற்றம் தொடருவதால் அந்த பகுதி மக்களிடையே கடும் பீதி ஏற்பட்டுள்ளது. ராட்சத அலைகள் கரையில் உள்ள குடிசைகளை கடலுக்குள் இழுத்து சென்றது.
தொடரும் கடல் சீற்றம்
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் கடந்த ஒருவார காலமாக கடல் சீற்றமாக காணப்படுகிறது. திடீரென்று கடல் உள்வாங்குவதும் பின்னர் ஆக்ரோஷமாக ராட்சத அலைகள் எழுவதுமாக இருக்கிறது. கடலில் தொடரும் இந்த மாற்றத்தினால் அந்த பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
கடல் சீற்றமடையும் போது எழும் ராட்சத அலைகள் கடற்கரையோரம் உள்ள சில குடிசை வீடுகளுக்குள் ஆக்ரோஷமாக புகுந்து, அந்த குடிசை வீடுகளை அப்படியே கடலுக்குள் இழுத்துச்சென்றது மேலும் கடற்கரையோரம் உள்ள பல வீடுகளுக்குள் கடல் தண்ணீர் புகுந்து உள்ளது. இதனால் பெரும்பாலான வீடுகள் கடுமையாக சேதம் அடைந்தன.
தடுப்புகளை தாண்டி வரும் அலைகள்
ராட்சத அலைகளில் இருந்து தப்பிக்க மீனவர்கள் கடற்கரையோரம் மணல் மூட்டைகள் மற்றும் கட்டைகளை வைத்து தடுப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆனாலும் ஆக்ரோஷமாக கடலில் இருந்து பாய்ந்துவரும் ராட்சத அலைகள் அந்த தடுப்புகளை சேதப்படுத்தி வருகிறது.
கடல் உள்வாங்கியது
இதற்கிடையே நேற்று காலை 9 மணி அளவில் அப்பகுதியில் கடல் 10 அடி தூரம் திடீரென உள்வாங்கியது. பின்னர் 11 மணி அளவில் கடல் சீற்றமடைந்து ராட்சத அலைகள் எழத்தொடங்கின.
கடல் அலைகளின் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தால் அப்பகுதி மீனவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில் ‘கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது இப்படி தான் கடல் உள்வாங்குவதும், பின்னர் சீற்றமடைந்து திடீரென்று ஆக்ரோஷமாக காட்சியளித்தது’ என்றனர்.
Link : http://www.dailythanthi.com/News/State/2016/06/14011415/Houses-damaged-by-sea-incursion-at-Pattinapakkam-create.vpf